Thursday , April 16 2026

முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசை நிகழ்ச்சி, பிரம்மாண்டமான முறையில், எந்தவித புகார்களும் இல்லாமல், ஒரு இசை நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக, ரசிகர்களின் பேரதாரவுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன். முதன் முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்க, இந்தியாவே எதிர்பார்க்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் தீம் மியூசிக், இந்நிகழ்ச்சியில் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது. ரசிகர்கள் உற்சாக கூக்குரலுடன் இப்பாடலை கொண்டாடி வரவேற்றனர்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு திறமையான இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞகள் என பலர் கலந்துகொண்டார்கள். கடல் அலை போல ரசிகர்கள் கூடி சந்தோஷ் நாராயணனை கொண்டாடினார்கள்.

தமிழ்த் திரையுலகிலிருந்து சித்தார்த், தீ, ஷான் வின்சென்ட் டி பால், ஷான் ரோல்டன், நாவ்ஸ் 47, ஆஃப்ரூ, கென் ராய்சன், சத்யபிரகாஷ், பிரியங்கா N K, ஹரி சரண், ஆனந்த் அரவிந்தாக்ஷன், விஜயநாராயணன், அனந்து, கிடாகுழி மாரியம்மா, மீனாட்சி இளையராஜா, ஞானமுத்து, ஆண்டனி ஆகியோருடன் மற்றும் பலர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இந்த இசை நிகழ்ச்சி எந்த இடைவேளையும் இல்லாமல் தொடர்ந்து 3 மணி நேரம் ஆடல் பாடலுடன் அரங்கேறியது. அட்டகாசமான ஒளி அமைப்பு, விதவிதமான கிராபிக்ஸ் காட்சிகள் என தென்னிந்தியாவில் வெளியரங்கில் முதல் முறையாக இவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்ச்சி, மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றது, இதுவே முதல் முறையாகும்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்ள, பெரும் கொண்டாட்டதுடன், எந்த விதப் புகார்களும் இல்லாமல், ரசிகர்களுக்கு மிக இனிமையான, புதுமையான அனுபவமாக இந்நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

ரசிகர்களுக்காக சிறப்பு மெட்ரோ ரயில் சேவை 12 மணி வரை அனுமதி பெறப்பட்டு, நிகழ்வு முடிந்தவுடன், டிக்கெட் எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாக இரயில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி பெற்றிருந்தது பாராட்டுக்களை பெற்றது. எல்லாவகையிலும் இந்த இசை நிகழ்ச்சி ஒரு முன் மாதிரியாக நடந்தேறியுள்ளது.

About Publisher

Check Also

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர …