Friday , June 5 2026

வெப் சீரிஸில் நடிக்கும் “தேன்” பட நாயகன் தருண்குமார்

கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த அந்த சமயத்தில் தான் மிகச்சரியாக கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனாலும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டை பெற்றது மேலும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் பல விருதுகளை அள்ளி வந்துள்ளது.

அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் வேலு என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருந்த படத்தின் நாயகன் தருண்குமார், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நம்பிக்கையான நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என நினைக்க வைத்தார்.

அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் 11வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் இந்தப்படம் திரையிடப்பட்டதில், தருண்குமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

இந்தப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநருக்கும் மகிழ்ச்சி.. பணம் போட்டு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கும் வசூல் ரீதியாக ரொம்பவே மகிழ்ச்சி.

அடுத்த படத்தையும் தருண்குமாரை வைத்தே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

அதுமட்டுமல்ல, தேன் படம் கொடுத்த அடையாளத்தால் தருண்குமாரை தேடி புதிய படங்கள், வெப்சீரிஸ் என வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

இது குறித்து நடிகர் தருண்குமார் கூறும்போது, “தற்போது பரணி,, கார்த்திக் ராம்ன்னு ரெண்டு இயக்குநர்களோட படங்கள்ல ஹீரோவா நடிக்கிறேன்.. இவை தவிர தன்னிகரற்ற தயாரிப்பாளர்கள் ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரிஸில் நடிக்கிறேன்..

தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் இயக்குநர் அறிவழகன் இயக்குகிறார். அருண்விஜய்யுடன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

எதிர்காலத்தில் சினிமா அளவுக்கு வெப்சீரிஸும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும்..

தமிழ், தெலுங்குல மட்டும் நடிச்சுட்டு இருந்த சமந்தா, இன்னைக்கு பேமிலிமேன்-2 வெப் சீரிஸ்ல நடிச்சதுனால பான் இந்தியா ஆர்டிஸ்ட்டா மாறிட்டாங்க..

இந்த மாற்றத்திற்கு நடிகர்கள் இப்போதிருந்தே தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்..

“தேன்” படத்தில் நடிச்சதுக்காக சிறந்த நடிகருக்கான தாதா சாஹேப் பால்கேப் விருது கிடைத்ததில் ரொம்பவே மகிழ்ச்சி.

நிறைய திரைப்பட விழாக்களில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. தற்போது மும்பை திரைப்பட விருது விழா உட்பட இன்னும் சில திரைபட விழாக்களில் கலந்துகொள்ள தேன் படம் அனுப்பப்பட்டுள்ளது.

சினிமாவிற்குள் நுழைந்த பத்து வருடத்தில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைத்தது இல்ல. இந்தப்படத்தில் நடிக்கும்போது படம் ரிலீஸானால் என்னுடைய கேரியரில் மாற்றம் வரும் என எதிர்பார்த்தேன்.. ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை.

ஆறு மாதம் உடற்பயிற்சி.. நானும் உதவி இயக்குநர் மாதிரி மாறிவிட்டேன்.

இந்தப் படத்தின் வெற்றி தோல்வி என் தோள்மீது இருக்கிறது என நினைத்துக்கொண்டு நடித்தேன்..

அந்தவகையில் ஒரு நடிகர் என நல்ல அடையாளம் கொடுத்திருக்கிறது இந்த தேன் படம்..

இப்போது ஹீரோ வில்லன் என பல கதாபாத்திரங்கள் தேடி வருகிறது. ஒரு நடிகனாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை” என்கிறார் தருண்குமார்..

அமீர் இயக்கத்தில் சந்தனத்தேவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த நேரத்தில் அந்தப்படம் திடீரென நின்றுவிட்டது. ரொம்ப சங்கடமா போச்சு.
..
“அயலான், சந்தனத்தேவன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் தேன் பட வாய்ப்பு வந்தது..

சந்தனத்தேவன் படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருந்தார் இயக்குநர் அமீர் .

ஒரு வருடம் அந்தப் படத்திற்காக பணியாற்றினோம்.

மீண்டும் தொடங்க இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். சிறப்பா வரக்கூடிய படம். நல்ல படங்கள் நின்றுவிடக்கூடாது.

அந்தப் படத்தில் ஆர்யாவுடன் நிறைய காட்சிகளில் நடித்துள்ளேன். சார்பட்டா பரம்பரை பார்த்தபோது சந்தனத்தேவன்ல பார்த்த ஆர்யாவா இதுன்னு ஆச்சர்யப்பட வைக்குற மாதிரி சார்பட்டா பரம்பரைல அப்படியே டோட்டலா மாறிட்டாரு.

மிகச் சிறந்த உழைப்பாளியாக நிற்கிறார்.. என அந்தப்படம் குறித்த நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார் தருண்குமார்..

About Publisher

Check Also

“‘வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”

“‘வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை” முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *