Sunday , May 17 2026

சென்னை நந்தனம் ஒ ய்எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது

இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

சென்னை நந்தனம் ஒ ய்எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்….

E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது…

இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை YMCA நந்தனம் மைதானத்தில், இந்த லைவ் இன் கான்சர்ட் நடக்கவுள்ளது. இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47 வருடங்களைக் கடந்து, உலகளவில் நம் அனைவரையும் அசத்தி வரும் அவரைக் கொண்டாடும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எந்த ஒரு பாடலையும் உடனடியாக ஸ்வரம் எழுதிப் பாடும் திறமை கொண்ட கலைஞர் சித்ரா அம்மா. அவர் இந்த தமிழ் மண்ணில் தான் தொடர்ந்து பாடி வருகிறார். அதனால் இந்த விழாவைச் சென்னையில், இங்கு நடத்துவது தான் சிறப்பாக இருக்கும். அவர் இந்த விழாவிற்கு ஒப்புக்கொண்டது எங்களுக்குப் பெருமை. இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய கனரா வங்கிக்கு நன்றி. இந்த செய்தியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கனரா வங்கி சார்பில் ஐசக் ஜானி பேசியதாவது….

சித்ரா அம்மா பெயரைச் சொன்னால் தெரியாதவர்கள் யாருமே இல்லை, இது வெறும் இசை நிகழ்ச்சி அல்ல, சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வை எங்களது கனரா வங்கி ஸ்பான்சர் செய்வது எங்களுக்குப் பெருமை. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. கனரா வங்கி சார்பில், உலகமெங்கும் உள்ள ரசிகர்களை இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.

Noise & Grains சார்பில் மஹாவீர் பேசியதாவது….

எங்களது எல்லா நிகழ்ச்சிகளிலும், நீங்கள் எல்லோரும் எப்போதும் துணை நிற்கிறீர்கள் நன்றி. நானும் கார்த்தியும் எப்போதும் அவரை சித்ரா அம்மா என்றே அழைப்போம். அது அன்பால் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் எஸ் பி பி சார் இருந்த போது ஒரு நிகழ்வு நடந்தது, எப்போதும் ஒரு சிலர் தான் நம்மைக் கவனித்து, தட்டிக்கொடுத்து, நீ சரியாகச் செய்து விடுவாய் என ஊக்கம் தருவார்கள், அதைப் புன்னகையுடன் எஸ் பி பி சார் செய்வார். அதன்பிறகு அதைச் செய்வது சித்ரா அம்மா தான். எப்போதும் பாஸிடிவிடி தருவார். நம் தமிழக மக்கள் போல இசை நிகழ்வை ரசிப்பது யாருமில்லை. எல்லாவிதமான இசையையும் ரசிப்பார்கள், அப்பா அம்மா எமோஷனல் கனக்ட்டும் இந்த ஊரில் இருக்கிறது. என் அப்பா அம்மவை அனுப்பி வைக்க வேண்டும் எனப் பலர் இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட் கேட்டார்கள், அது எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் தான். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சித்ரா அம்மாவிற்கு நன்றி. E Lounge Events மற்றும் கனரா வங்கிக்கும் நன்றி. அனைவரும் காலத்தைத் திருப்பித் தரும், இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டாடுங்கள் நன்றி.

பாடகி சின்னக்குயில் சித்ரா பேசியதாவது…

அனைவரும் வந்தது மிகுந்த மகிழ்ச்சி. நான் இதை எதிர்பார்க்கவில்லை, இதுவரை நான் பல இசை நிகழ்ச்சிக்குச் சென்று பாடியுள்ளேன், ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னைக் கொண்டாடும் நிகழ்வாக ஒருங்கிணைத்துள்ளார்கள். 3 மணி நேரம், மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ருபா ரேவதி என நான்கு பாடகர்கள் என்னுடன் இணைந்து பாடவுள்ளனர். பாப்புலரான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடவுள்ளோம். எனக்கு இத்தனை வருடங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

உலகளவில் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்குவதில் புகழ்பெற்ற, ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் செஷில்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாராட்டு பெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்திய E Lounge Events நிறுவனமும், திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள Noise & Grains நிறுவனமும் இணைந்து, கனரா வங்கி ஆதரவுடன் இந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள‌ ஒ ய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் இன்ஸைடர்.இன் மற்றும் புக் மை ஷோ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் கிடைக்கும்.

About Publisher

Check Also

Priyanka Mohan’s ‘Made in Korea’ Press & Media Interaction

Priyanka Mohan’s ‘Made in Korea’ Press & Media Interaction Producer Sreenidhi Sagar of Rise East …