Tuesday , August 18 2026

மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம் – பா.இரஞ்சித்.

‘மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,

”மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இன்று மதுரையிலும், நாளை கோவையில் நடத்துகிறோம், மேலும் வரும் 24 முதல் 31 ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் சென்னையில் நடைபெறுகிறது.

நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம். மார்கழி என்பது தமிழ் மாதம் இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசையும் நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்தது தான்.

நாட்டுப்புற பாடல்கள் வாழ்வியல் சம்மந்தப்பட்ட தினசரி விசயங்களை இசை வடிவமாக கொண்டுவருவது தான், இதனை சிஸ்டமாக உருவாக்கி வைத்துள்ளோம் தற்போது அதற்கான இடம் கிடைத்துள்ளது. சினிமா இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு போன்று மண் சார்ந்த இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தான் இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

நாட்டுப்புற இசையை வேறொரு தளத்திற்கு கொண்டுசெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் இந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு. இந்த நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும் போது ஆதரவு கிடைக்குமா என எண்ணிய நிலையில், மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தென் தமிழக ஒப்பாரி பாடல் கலைஞர்களை மேடையில் ஏற்ற வேண்டிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சியில் வழங்கியுள்ளோம்.

நாட்டுப்புற இசைகளை மேடை ஏற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம், மக்களிடம் கலையை ஜனநாயக படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். சென்னை சங்கமம் மீண்டும் தொடங்கினால் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,

நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும், கலைகளின் தன்மையை புரிந்து வாய்ப்பு அளித்தால் இந்த கலை அடுத்த பரிமாணத்தை அடையும். சமூக வலைதளங்களின் மூலமாக உருவாகும் வரவேற்பால் கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வும் வழங்க வேண்டும்”என்றார்.

நிகழ்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர் சிறப்பு விருந்தினராக சு.வெங்கடேசன் MP, சமூக செயல்பாட்டாளர் எவிடன்ஸ்கதிர், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கலந்துகொண்டனர்.

About Publisher

Check Also

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 …