Tuesday , August 18 2026

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் “படையாண்ட மாவீரா”விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து

Dear Media Friends,

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் “படையாண்ட மாவீரா”விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா.

மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பின் நெருப்பு தகிக்கும் ஐந்தாவது பாடலை இயக்குநர் வ.கௌதமனிடம் தந்ததோடு அப்பாடலைப் பற்றி ஆகப் பெரும் நெகிழ்வோடு தனது எக்ஸ் தளப் பதிவில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

கௌதமன் இயக்கும்
புரட்சிப் படம்
படையாண்ட மாவீரா

அனைத்துப் பாடல்களையும்
எழுதியிருக்கிறேன்

ஒவ்வொரு பாடலையும்
வந்து வாங்கிச் செல்வார்;
வாசித்து வழங்கச் சொல்வார்

இந்தப் பாடலை
வாசிக்கும் பொழுது
குளமான கண்களோடு
கும்பிட்டுக்கொண்டே எழுந்தார்

அவர் கைகளில்
பாட்டுத்தாளை ஒப்படைத்தேன்
நல்ல ரசிகனுக்கு
நல்ல பாடல் அமையும்

இசை: ஜி.வி.பிரகாஷ்

பல்லவி:

“மாவீரா மாவீரா
வாவா வீரா மாவீரா!

நதியில் குளித்தது போதும்
இனிமேல்
குருதியில் குளித்து வா வா
பொடிநடை போட்டது போதும்
இனிமேல்
புலிநடை போட்டு வா வா

ஆதித் தமிழின்
அடையாளமே வா
ஆதிக்கம் அழிக்கும்
படையாழமே வா

ஆதவனை உன்
இடுப்பில் கட்டு
ஆயிரம் யானையைக்
கால்களில் கட்டு

காக்கும் கடவுள் அம்சம் நீதான்
வன்னிக் காட்டின் வம்சம் நீதான்

ஆயிரம் கோயில் ஆராதிக்கும்
அய்யனாருமே நீயேதான்

எரிமலை பொடிபட
எதிரிகள் அடிபட
கோழைகள் வழிவிட
ஏழைகள் வழிபட
எழுந்த மாவீரன் நீயேதான்

சரணம்:

உயிரைப் பிரிவது
மட்டுமா சாவு?
ஊரைப் பிரிவதும்
சாவுதானடா!
மண்ணகம் எல்லாம்
மண்ணகம் அல்ல
மானம் வீரம் வாழ்வுதானடா

தமிழன் யார்க்கும் சோறு கொடுப்பான்
மண்ணைத் தொட்டால்
திருப்பி அடிப்பான்

வீரத் தமிழன் மானத் தமிழன்
மூன்று இடத்தில் திருப்பி அடித்தான்

ஒருகாடு எங்கள் சந்தனக்காடு
மறுகாடு இந்த முந்திரிக்காடு
எல்லாவற்றிலும் மேலாய் இருப்பது எங்கள் எங்கள் வன்னிக்காடு

மாவீரா மாவீரா
வா வா வீரா மாவீரா!

படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் மிகவும் உக்கிரமான நான்கு சண்டைக் காட்சிகளை “ஸ்டண்ட்” சில்வா வடிவமைக்க நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப் படுத்தியுள்ளார். மேலும் படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், “ரெடின்” கிங்ஸ்லி, “நிழல்கள்” ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், “தலைவாசல்” விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார். பேரழகான இசையை ஜிவி.பிரகாஷ் குமாரும், பாடல்களை ‘”கவிப்பேரரசு” வைரமுத்து அவர்களும் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன், வெற்றிவேல் மகேந்திரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் முருகன் கவனிக்கின்றனர். இப்படைப்பைப் பற்றி இயக்குநர் வ.கௌதமன் பேசும் பொழுது நேர்மையோடும் அறத்தோடும் படைக்கப்பட்ட “படையாண்ட மாவீரா” மொழி கடந்து, இனம் கடந்து மனித மனங்களை கொள்ளையடிப்பான், ஆன்மம் அதிர மெய் சிலிர்க்க வைப்பான். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இப்படைப்பு வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என மகிழ்ச்சி பொங்க நிறைவு செய்கிறார்.

About Publisher

Check Also

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 …